Archive for September 2014

எம்&எம் ஸ்கார்ப்பியோ - ஒரு அலசல்

இந்த வருடத்துடன் ஸ்கார்ப்பியோவின் வயது 12. 1990களில் ரவுடிகள் என்றாலும் அரசியல்வாதிகள் என்றாலும், அவர்களிடம் இருந்தது டாட்டா சுமோக்கள் தான். அதன் பிறகு 1998ல் வந்த டாட்டா சஃபாரி அரசியல்வாதிகள் மற்றும் பெரும் தாதாக்கள் வீட்டில் கம்பீரமாக நின்றது. அதன் பிறகு 2002ல் வந்தது மஹிந்த்ரா ஸ்கார்ப்பியோ.

     ஆரம்பத்தில் ஸ்கார்ப்பியோவின் விற்பனை விகிதம் குறைவாக தான் இருந்தது. உறுதியான கட்டமைப்பு, பிரம்மாண்ட தோற்றம், அதிகமான பவர் என்று அதன் அனைத்து பலங்களும் தெரிந்த பின்னர் 2003 ஆம் ஆண்டு முதல் விற்பனை அதிகமானது. முக்கால்வாசி டாட்டா சஃபாரிகளை அடித்து விரட்டியது. மஹிந்த்ராவின் நிறைவான சர்வீஸ் அனைவரையும் கவர்ந்தது. சரியாக சொல்லவேண்டுமென்றால் மஹிந்த்ரா மீது பெரும் நம்பிக்கையை ஸ்கார்ப்பியோ தான் ஈட்டி தந்தது.

     நாளாக நாளாக ஸ்கார்ப்பியோவிற்கு ரசிகர்கள் அதிகமாகி கொண்டே போனது. காலத்திற்கேற்ப சிறு மாறுதல்கள் தேவைப்பட்டது. ஸ்கார்ப்பியோவின் இரண்டாவது தலைமுறை வந்தது. இந்த முறையும் விற்பனையில் மாறுதல் இல்லை. சக்கைப்போடு போட்டது !!

     கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி, ஸ்கார்ப்பியோவின் மூன்றாவது தலைமுறையை வெளியிட்டது. இந்த புதிய ஸ்கார்ப்பியோவை கொஞ்சம் அலசுவோம்.



     முதலில் நான்கு மீட்டர் நீளம். இந்திய அரசாங்கம், ஒரு வாகனத்தின் நீளம் நான்கு மீட்டர்களுக்குள் இருந்தால் வரிவிலக்கு அளிப்பதாக அறிவித்தது. அதன் பிறகு வந்த கார்களான மாருதி ஸ்விஃப்ட் டிசையர், மாருதி எர்டிகா போன்ற கார்கள் மட்டுமல்லாது டாட்டா ஏஸ்(அதாங்க, 'சின்ன யானை'!!) அனைத்தும் ஹிட்டோ ஹிட்டு. இதுவரை வந்த ஸ்கார்ப்பியோக்கள் நான்கரை மீட்டரில் இருந்தபோது புது ஸ்கார்ப்பியோ நான்கு மீட்டருக்கு வந்திருக்கிறது. இதற்கு பிறகு மஹிந்த்ராவின் அனைத்து கார்களும் நான்கு மீட்டர்களுக்கு மாற்றப்படும் என்று அந்நிறுவனம் சொல்லியிருக்கிறது. இதனால் காரின் விலை பெருமளவில் குறையும்.



     இதுவரை இரண்டு தலைமுறைகளாக வந்த ஸ்கார்ப்பியோக்கள் தோற்றத்தில் பெரியளவில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. எனவே இந்த முறை எம்&எம் நிறுவனம் வெளிப்புறம் மற்றும் உட்புற தோற்றங்களை மாற்றியிருக்கிறது.



     காரின் முன் புறத்தை இதுவரை ஆக்கிரமித்த சாதாரண ஹெட்லைட் ஐ மாற்றி தற்போது எல்.இ.டி ஹெட்லைட் பொருத்தப்பட்டுள்ளது. புதிய க்ரில்லை பார்க்கும்போது டொயோட்டா லான்ட்க்ரூசர் ப்ராடோ ஞாபகத்திற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.



     பின்புறத்தை பெருமளவில் மாற்றினாலும் ரசிகர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளகூடிய வடிவமைப்பு அல்ல. பலருக்கும் பிடிக்காமல் போக வாய்ப்புள்ளது. பின்புற கதவின் கைப்பிடியை மாற்றியுள்ளனர். ஸ்டாப்லைட்டும் எல்.இ.டி யால் செய்யப்பட்டிருக்கிறது.




     என்னை மிகவும் கவர்ந்தது உட்புற மாற்றங்கள்தான். எத்தனை வருடங்கள் கடந்தாலும் உட்புற அலங்காரத்தில் கவனம் செலுத்தாத எம்&எம் நிறுவனம் இப்பொழுது மிகவும் அருமையாக வடிவமைத்திருக்கிறது. எம்&எம் நிறுவனத்தின் கடந்த தயாரிப்பான XUV5OO வின் உட்புற அலங்காரம் போல் தெரிந்தாலும் நன்றாகத்தான் இருக்கிறது. ஸ்டீயரிங் வீல் XUV5OO விலிருந்து அப்படியே எடுத்திருகிறார்கள். 6 இன்ச் டச் ஸ்க்ரீன் மியுசிக் ப்ளேயர் மற்றும் நேவிகேஷன் சிஸ்டமும் அனைவரையும் கண்டிப்பாக கவர்ந்திழுக்கும்.



     காலம்காலமாக மஹிந்த்ரா வண்டிகளில் அனைவரும் குறை சொல்வது 'பாடி ரோல்' தான். வேகமாக செல்லும்போது திரும்பினால் அதன் அதிர்வு உள்ளே உக்கார்ந்திருக்கும் அனைவரும் உணர்வார்கள். இந்த முறை எம்&எம் நிறுவனம் தனது புதிய தொழில்நுட்பத்தால் பாடி ரோல் ஐ மிகவும் குறைத்திருக்கிறது.



     இஞ்சினில் மாற்றம் இல்லாதபோதும் இந்த முறை நன்றாக டியூன் (லிங்குசாமி டியூனிங் அல்ல !!) செய்யபட்டிருக்கிறதால் பெர்ஃபார்மன்ஸ் உயர்ந்திருக்கிறது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது. புதிய கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன் 4X4 வசதியும் ஏபிஸ் ஏர்பேக் வசதியும் ஆப்ஷனளாக தந்துள்ளது.

   
இந்தியாவின் வாகன விற்பனை வரலாற்றின் முதல் முறையாக, புதிய ஸ்கார்ப்பியோவை நீங்கள் Snapdeal.com இல் முன்பதிவு செய்துக்கொள்ளலாம் !! கட்டணம் ரூ.20,000/-  முன்பதிவு செய்ய--> க்ளிக்


     நடிகர்களை போல, அனைத்து வாகனங்களுக்கும் தீவிர ரசிகர்கள் இருப்பது அல்ல. யமஹா RX100, அம்பாசடர், மாருதி 800, புல்லட் என சில வாகனங்களுக்கே அந்த கௌரவம் கிடைக்கும். அந்த வாகனங்களின் தயாரிப்பு நிறுத்தப்பட்டாலும் அவற்றின் பெயர் நிலைத்து நிற்கும். அவற்றில் ஸ்கார்ப்பியோவும் ஒன்று. அம்பாசடர், மாருதி 800 போல் ஸ்கார்ப்பியோவின் தயாரிப்பு நிறுத்தக்கூடாது என்பதே ரசிகர்களின் ஆசை.
Tuesday, September 30
Posted by Sibhi Kumar SenthilKumar

சாலையின் வகைகள்

     நம்மில் பலருக்கு நமது சாலையில் எத்தனை வகைகள் இருக்கிறது என்று தெரிவதில்லை. (நமது நாட்டில் பல இடங்களில் சாலையே இல்லை என்று நீங்கள் சொல்வது எனக்கு கேட்கிறது!!!) ஏன் நமக்கு தெரியவில்லை என்பதற்கு பல காரணங்கள் சொன்னாலும் முக்கியமான காரணமாக நான் கருதுவது வட்டார போக்குவரத்துத் துறையின் மெத்தனம்.

   
வளர்ந்த நாடுகள் என்று சொல்லப்படும் அமெரிக்கா போன்ற நாடுகளில், லைசென்ஸ் எடுக்கவேண்டுமென்றால் சாலை விதிகள் மற்றும் சாலை குறியீடுகளை பற்றி கேட்கப்படும் கேள்விகளுக்கு (எழுத்துப்பூர்வமாக) பதிலளிக்கவேண்டும். நமது நாட்டில் லைசன்ஸ் எப்படி கொடுக்கப்படுகிறது என்று நான் சொல்லத்தேவையில்லை.

     அதனால், இந்த பதிவில் நான் அடிப்படையான சாலை குறியீட்டுகளை உங்களுக்காக பதிவிடுகிறேன்.

1.ஸ்டாப் லைன் (Stop Line):

பொதுவாக இரு வேறு சாலைகளின் இணைப்பிலும் சாலையின் டிராஃபிக் லைட் முன்பாகவும் இருக்கும். இந்த கோட்டிற்கு முன்பாகவே உங்கள் வாகனத்தை நிறுத்தவேண்டும். கோட்டை தாண்டி நிறுத்துவது தண்டனைக்குரிய செயலாகும்.



2.ஜீப்ரா கிராசிங் (Zebra Crossing):

ஒரு பக்கத்திலிருந்து மறுப் பக்கத்திற்கு சாலையில் கடந்து செல்லும் பாதசாரிகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டவை. பாதசாரிகள் இவற்றை தவிர்த்து சாலையின் ஊடே கடந்தால் தண்டனைக்குரிய செயலாகும்.




3.தொடர்ச்சியில்லாத இணைவான கோடு (Parallel Broken Line):

இவற்றை Give way line என்றுக்கூட அழைப்பார்கள். ஒரு சிறிய சாலையிலிருந்து நெடுஞ்சாலையிலோ அல்லது முக்கியமான சாலையிலோ இணையும்போது இவற்றை உபயோகித்திருப்பார்கள். அதாவது உங்கள் முன்னே இருக்கும் சாலையில் செல்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.



4.தடுப்புக் கோடு -இரண்டு வழிச்சாலையில் (Barrier Line):

தொடர்ச்சியான வெள்ளைக் கோடுகளானது. ஓட்டுநர் முன்னிருக்கும் வாகனத்தை முந்துவதற்காக கண்டிப்பாக இந்த கோட்டை தாண்டி செல்லக்கூடாது. எந்த பக்கத்தில் செல்கிறோமோ அதையே கடைப்பிடித்து செல்லவேண்டும்.


5.தடுப்புக் கோடு -நெடுஞ்சாலைகளில் (Barrier Line):

இந்த வகை கோட்டினை நெடுஞ்சாலையில் லேன்களை (Lane) பிரிப்பதற்கு பயன்படுத்தப் படுகிறது. ஓட்டுநர்கள் இவற்றை தாண்டலாம்.





6.தொடர்ச்சியான இணைவான கோடு (Continuous Parallel Line):

இதுவும் ஒரு வகையான தடுப்புக் கோடு தான். இந்த வகையான கோடு இருந்தால் ஓட்டுனர்கள் வாகனங்களை முந்துவதற்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.





7.மஞ்சள் கோடு (Yellow line):

இவ்வகை கோடுகளை பொதுவாக சாலையின் ஓரத்தில் போடுவார்கள். இந்த மஞ்சள் கோடு போடப்பட்டிருக்கும் இடங்களில் கண்டிப்பாக வண்டியை நிறுத்தக்கூடாது.





8.தொடர்ச்சியில்லாத கோடு மற்றும் தடுப்புக் கோடு (Broken Line to Barrier Line):
சில சாலைகளில், தொடர்ச்சியில்லாத கோடு முக்கியமான இடங்களில் (எ.கா. வளைவுகள்) தடுப்புக் கோடுகளாக மாறும். நெடுஞ்சாலையாக இருக்கும்பட்சத்தில் தொடர்ச்சியில்லாத கோடு வரை லேன்களை மாற்றி கொள்ளலாம். ஆனால் தடுப்புக் கோடு வந்த பிறகு லேன் மாறக்கூடாது.

9.சரியான லேனில் செல்லுங்கள்:

மேலுள்ள படத்தில் காட்டி இருப்பதுப்போல நமது நெடுஞ்சாலையின் உட்பகுதியை 'Inner Lane' என்பார்கள். வெளிப்பகுதியை 'Passing Lane' என்பார்கள். பொறுமையாக செல்லும் வாகனங்கள் (கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள்) இடது புறமாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும் வாகனங்கள் வலது புறமாக செல்லவேண்டும். ஆனால் காலம்காலமாக இந்த விதிமுறை மீறப்பட்டு வருகிறது. பெரும்பாலான லாரி ஓட்டுநர்கள் வலது புறமாகவே செல்வார்கள். இது முற்றிலும் தவறு. நெடுஞ்சாலையில் நடக்கும் பெரும்பாலான விபத்துகளுக்கு இதுவே காரணம்.

இந்த பதிவை படிக்கும் அனைவரும், இதற்கு பிறகு விதிமுறைப்படி வாகனத்தை ஓட்டுவோம் என்பதை உறுதியெடுத்துக்கொள்வோம். ஜெய்ஹிந்த் !!
Tuesday, September 23
Posted by Sibhi Kumar SenthilKumar

நமது வாகனத்தின் மைலேஜ்'ஐ அதிகப்படுத்துவது எப்படி?

     வணக்கம் வாசகர்களே... கார் வாங்கும்போது, அவற்றின் டிசைன், சர்வீஸ், தரம் ஆகியவற்றை பார்ப்போம். ஆனால் மைலேஜ் என்ற ஒரு பகுதியை சிலர் கவனிக்க மாட்டார்கள். இல்லையென்றால், 'எங்கள் கார்தான் இந்தியாவிலே அதிகமாக மைலேஜ் தரும். அதற்கு அராய் (ARAI) சான்றிதழ் இருக்கிறது' என்று கார் தயாரிப்பாளர்கள் கூறுவதை நம்பி வாங்குவார்கள்.



     முதலில் மைலேஜ் என்றால் என்ன?? ஒரு லிட்டர் எரிப்பொருளுக்கு (டீசல்/பெட்ரோல்) எத்தனை கிலோ மீட்டர்கள் செல்லமுடியும் என்பதை கூறுவதே மைலேஜ். அராய் (ARAI) சான்றிதழ் எப்படி தரப்படுகிறது என்று சொல்கிறேன். ஒரு வாகனத்தை குறிப்பிட்ட சில ஆராய்சிகள் மூலம் (லேப்களில் மட்டுமே) ஆராய்ந்து அவற்றின் மைலேஜ்'ஐ கணித்து சொல்வதுதான் அராய் நிறுவனத்தின் வேலை. 

     நமது தினசரி வாழ்க்கை முறையில் அராய் சான்றிதழின்ப்படி மைலேஜ் கிடைக்காதற்கு காரணங்கள் பல உள்ளன. அவற்றில் முக்கியமானவற்றை இந்த பதிவில் சொல்கிறேன். நானும் இந்த விஷயங்களை பின்பற்றியப்போது ஒரே மாதத்தில் என்னுடைய மைலேஜ் உயர்வதை கண்டேன்.

1. சரியான காற்றழுத்தம்: நான்கு டயர்களிலும் மேனுவலில் குறிப்பிட்ட அளவு காற்றழுத்தம் இருப்பதை ஒரு மாதத்திற்கு ஒரு முறை சரிப்பார்த்துக் கொள்ளுங்கள். இதற்கான பிரத்யேக கருவிகள் சந்தையில் கிடைக்கிறது இல்லையென்றால் பெட்ரோல் பங்கிலும் சரிபார்த்துக் கொள்ளலாம்.



2. ஏர் மற்றும் ஆயில் ஃபில்டர்கள்:  அழுக்கான ஃபில்டர்கள் மைலேஜ் ஐ கடுமையாக குறைக்கும். அதனால் மேனுவலில் குறிப்பிட்ட காலக்கெடுவில் அவற்றை மாற்றவேண்டும்.






3.எடையை குறையுங்கள்: இடம் இருக்கிறதே என்று காரில், தேவையில்லாத பொருட்களை ஏற்றாதீர்கள்.








4.எரிப்பொருளை குறைவாக நிரப்புங்கள்: எரிப்பொருளை பாதி டாங்க் அல்லது கால் டாங்க் நிரப்பியிருந்தால் போதும். நீங்கள் நிரப்பும் எரிப்பொருள் வண்டியின் மொத்த எடையை கூட்டிவிடுவதால் ஃபுல் டாங்க் நிரப்புவதை தவிர்க்கவேண்டும்.










5.தரமான எரிப்பொருள்: சில பங்குகளில் பெட்ரோல் மற்றும் டீசலில் கலப்படம் செய்கிறார்கள். எனவே உங்கள் சுற்றுப்பகுதியில் உங்களுக்கு நன்கு பரிட்சயமான பங்குகளில் மட்டுமே எரிப்பொருளை நிரப்புங்கள்.





6.ஏசி யை உபயோகிக்கும் இடங்கள்: நகரத்தில் டிராஃபிக்கில் செல்லும்போது  முடிந்தவரை ஏசியின் பயன்பாட்டை குறையுங்கள். இதுவே நெடுஞ்சாலைகளில் கண்டிப்பாக ஏசி உபயோகிக்கவேண்டும். ஏனென்றால், திறந்திருக்கும் ஜன்னல்களால் வேகமாக வரும் காற்று தடைப்படும். எனவே அவற்றை தாண்டி செல்ல அதிக சக்தியை உபயோகிக்கவேண்டும்.



7.மிதமான வேகத்தில் ஒட்டுங்கள்: அதிக வேகம் மைலேஜ் ஐ மட்டுமல்ல. நமது பார்வையின் தூரத்தையும் குறைக்கும்.





8.'இனிப்பான வேகத்தை' கண்டுப்பிடியுங்கள்: ஒவ்வொரு வண்டியும் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் பயணிக்கும்போது அதிக மைலேஜ் தரும். அந்த வேகத்தை 'இனிப்பான வேகம்' என்பார்கள். உங்களது வண்டியின் இனிப்பான வேகத்தை கண்டுப்பிடித்து அந்த வேகத்தை கடைப்பிடித்தால் பெருமளவு எரிப்பொருளை சேமிக்கலாம்.



9.பாதுகாப்பான தூரத்தில் பயணியுங்கள்: முன்செல்லும் வாகனத்திற்கும் உங்களது வாகனத்திற்கும் இடைவெளி விட்டு பயணிக்கவும். இதனால் தேவையில்லாமல் அதிகமாக பிரேக் ஐ பயன்படுத்த வேண்டாம்.



10.சரியான கியரில் செல்லுங்கள்: உங்களின் வேகத்திற்கு ஏற்றார்போல் கியரை மாற்றவும். அனைத்து கார்களிலும் பொதுவாக மேனுவலில் குறிப்பிட்டிருப்பார்கள். அவற்றை கடைப்பிடித்தால் எரிப்பொருள் விரயம் கணிசமாக குறையும்.





11.பயணத்தை திட்டமிடுங்கள்: காரை எடுப்பதற்கு முன்பே உங்கள் வழித்தடத்தை திட்டமிடுங்கள். முடிந்தவரையில் பைபாஸ் அல்லது நெடுஞ்சாலையில் செல்ல முயலுங்கள். கிலோமீட்டர் அதிகமானாலும் எரிப்பொருள் விரயம் பெருமளவில் குறையும்.



12.அட்டவணை தயார்செய்யுங்கள்: நீங்கள் நிரப்பும் எரிப்பொருளையும்
செல்லும் தூரத்தையும் கொண்டு ஒரு அட்டவணை தயார் செய்யுங்கள். எரிப்பொருள் நிரப்பும் ஒவ்வொரு முறையும் தவறாமல் அதில் எழுதிவிடுங்கள். இதனால் உங்களது கார் எவ்வுளவு மைலேஜ் தருகிறது என்று தெரிந்துவிடும்.



    இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றினால் உங்களது மைலேஜ் கண்டிப்பாக உயரும்.

புதிய பதிவுகள்

Recent Posts Widget

மெக்கானிக்

My photo
Automobiles enthusiast; Video/Photo/Audio editor; blog writer; auto consultant; web UI/UX designer; wrapper designer; personalized products designer at PrintVenue.com & fiverr.com, keyboardist, bathroom singer, optimist and so on. A good learner & listener.

மாஸ் ஆன போஸ்ட்'கள்

ரெகுலர் கஸ்டமர்ஸ்

© Sibhi S Kumar. Powered by Blogger.

- Copyright © வட்டங்களில் சுழலுது வாழ்க்கை -Metrominimalist- Powered by Blogger - Designed by Sibhi Kumar -