Archive for 2014

வாகனத்துடன் கட்டாயம் இருக்கவேண்டியவை

     வணக்கம் வாசகர்களே.. இந்த பதிவில் நமது வாகனத்தில் எப்பொழுதும் கட்டாயமாக இருக்கவேண்டிய பொருட்களை சொல்லபோகிறேன். உங்களிடம் கார் இருந்தால், நான் கீழே சொல்லப்போகும் பொருட்களில் கொஞ்சம் முன்னரே இருக்கும். இல்லாவற்றை கண்டிப்பாக வாங்கிவிடுங்கள். கார் வாங்கப்போகிறீர்கள் என்றால், இந்த பொருட்களையும் காருடன் சேர்த்து வாங்கிவிடுங்கள். ஏனென்றால், மொத்தமாக வாங்கும்போது இவற்றின் விலை குறையும்.


1.ஜம்பர் கேபிள் (Jumper Cables):

கார் வைத்திருக்கும் அனைவரும் ஏதேனும் ஒரு சமயம் எதிர்ப்பாரா விதத்தில் பேட்டரி தீர்ந்துப் போய் நிற்பார்கள். இவற்றை உங்களுக்கு உபயோகப் படுத்த தெரியாவிட்டாலும் இவை இருந்தால் எவரேனும் தெரிந்தவர்கள் இதை உபயோகித்து ஸ்டார்ட் செய்ய முடியும். இதன் ஆரம்ப விலை ரூ.600.




2.பிரஷர் பார்க்கும் கருவி (Pressure Gauge):

அனைத்து டயரிலும் சரியான காற்றழுத்தம் இல்லையென்றால் மைலேஜ் ஐ கடுமையாக பாதிக்கும். விபத்து நடப்பதற்கும் கணிசமான அளவு வாய்ப்புள்ளதால் இந்த கருவியை கண்டிப்பாக உங்களுடன் வைத்துக்கொள்ளவும். இதன் ஆரம்ப விலை ரூ.300.


3.டக்ட் டேப் (Duct Tape):

நிறைய படங்களில் யாரையாவது கடத்தும்போது வாயில் ஒட்டியிருப்பதை பார்த்திருப்பீர்கள். இந்த டேப் மிகவும் உறுதியானது மற்றும் எளிதில் கிழியாது. எதிர்ப்பாரா விதத்தில் காரின் ஏதேனும் ஒரு பகுதி உடைந்துவிட்டால் ஓட்டுவதற்கு வசதியாக இருக்கும். இதன் ஆரம்ப விலை ரூ.300.




4.முதலுதவிப் பெட்டி (First Aid Box):

அனைத்து வாகனத்திலும் கட்டாயமாக இருக்கவேண்டிய வஸ்து இது. சரியான மருந்துகள் மற்றும் பொருட்களை தனியே வாங்கி நீங்களே ஒரு முதலுதவிப் பெட்டி உருவாக்கலாம். இல்லையென்றால் கடைகளில் ஒருசேர கிடைக்கிறது. இதன் ஆரம்ப விலை ரூ.595



5.டார்ச் லைட் (Flash Light):

எந்தவொரு நெருக்கடியான கட்டத்திலும் அதிகமாக தேவைப்படுவது டார்ச் லைட் தான். ஒரு மீடியம் சைஸ் டார்ச் லைட் (பேட்டரிகள் நீக்கப்பட்டு) எப்பொழுதும் உங்கள் வாகனத்தில் இருக்கவேண்டும்.






6.ஆல் இன் ஆல் கருவி (Multi Tool):


ஆல் இன் ஆல் கருவிகள் பல இருந்தாலும், அவற்றில் 'ஸ்விஸ் ஆர்மி கத்தி' எனப்படும் கருவி பிரபலமானது. இதன் ஆரம்ப விலை ரூ.175.






7.தீப்பெட்டி (Match Box)

லைட்டராக இருந்தாலும் பரவாயில்லை.



8.தண்ணீர் பாட்டில்கள் (Empty Water Bottles):


வாகனத்தில் கண்டிப்பாக இரண்டு தண்ணீர் பாட்டில்கலாவது இருக்கவேண்டும். மினரல் பாட்டில்களோ கூல்டிரிங்ஸ் பாட்டில்களோ கண்டிப்பாக இருக்கக்கூடாது. 'தெர்மோ செட்டிங் பிளாஸ்டிக்'ஆல் செய்யப்படும் பாட்டில்களே நல்லது.



9.பாதுகாப்பு சுத்தி (Safety Hammer):

பெரும்பாலும் நாம் அனைவரும் ஜன்னல்களை மூடியப்படியே ஏ.சி போட்டுக்கொண்டு தான் பயணம் செய்கிறோம். பல கார்களில் பவர் விண்டோஸ் தான் இருக்கிறது. எதேனும் விபத்து நடக்குமாயின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து தப்பிக்க கட்டாயமாக இந்த சிறிய சுத்தி தேவைப்படும். இதனுடைய பின்பக்கத்தின் மூலம் சீட்பெல்ட் ஐ வெட்ட முடியும். இதன் ஆரம்ப விலை ரூ.300.




10.பளபளக்கும் முக்கோணம் (Reflective Triangle):

இரவில் வெளிச்சமில்லாத சாலைகள் அல்லது நெடுஞ்சாலைகளில் நமது வாகனம் நின்று விட்டால், பின்னாடி வரும் வாகனங்களுக்கு நமது வாகனம் தெரியாமல் இடித்துவிட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மோட்டார் வாகன சட்டப்படி, இரவு நிற்கும் வாகனங்கள் கண்டிப்பாக ஒரு மீட்டருக்கு முன்பு இந்த முக்கோணத்தை வைக்க வேண்டும். ஒருவேளை எவரேனும் இடித்துவிட்டால். காப்பீட்டை கோர முடியாது. எனது நண்பருக்கு இந்த சம்பவம் நடந்து பிறகு அதை சரிசெய்ய ரூ.20000 செலவிட்டார். இதன் ஆரம்ப விலை ரூ.450.



11.காலி கேன் (Empty can):

எப்பொழுதும் உங்கள் வாகனத்தில் ஒரு காலி கேன் இருக்க வேண்டும் (குறைந்தபட்சம் 5லி அளவிலானது). கண்டிப்பாக இதில் உங்கள் எரிப்பொருளை தவிர வேறு எதையும் நிரப்பக்கூடாது. அவ்வபோது இவற்றில் ஓட்டை இருக்கிறதா என்று சோதித்துக்கொள்ளுங்கள்.


12.பெரிய குடை (Umbrella):


அந்த காலத்து பெரிய குடை அளவு இருக்கவேண்டும். இல்லையென்றால் சிறியவை இரண்டு.






13.போர்வைகள் (Blankets)


14.கைத்துண்டு (Towel)








15.பணம் (Emergency Change):

சில்லறைகள் கொஞ்சம் கட்டாயமாக வாகனத்தில் இருக்கவேண்டும். அவற்றை எக்காரணத்தை கொண்டும் அவசரமில்லாத நேரத்தில் எடுக்காதீர்கள்.





16.பேப்பர் & பேனா (Paper & Pen)










17.கார் சார்ஜர் (Car USB charger):

நீண்ட தூர பயணத்தின்போது நமது கைப்பேசி திடீரென்று சார்ஜ் தீர்ந்து நின்று அணைந்துவிடும். ஆல் பின் சார்ஜர்களும் கிடைக்கின்றது. இவற்றின் ஆரம்ப விலை ரூ.130







18.டிஷ்யூ பேப்பர்கள் (Tissue Papers):

இவற்றின் ஆரம்ப விலை ரூ.60.






 
     நான் மேலே குறிப்பிட்டிருக்கும் பொருட்கள் வாகனத்தில் இருந்தால் பல நேரங்களில் கண்டிப்பாக உங்கள் நேர விரயத்தையும் பண விரயத்தையும் தவிர்க்கலாம். சென்னைவாசிகள் G.P ரோட்டிற்கு சென்றால் நிமிடத்தில் இவற்றை வாங்கிவிடலாம். மற்றவர்கள், இவற்றில் சில பொருட்கள் உங்கள் பகுதியில் கிடைக்கவில்லை என்றால் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிக்கொல்லாம்.

இந்த பொருட்களை ஆன்லைனில் வாங்க சில இணையதள முகவரிகள்:
http://www.ebay.in/
http://www.amazon.in/
http://www.snapdeal.com/





என்ன கொடுமை சார் இது ??

உலகில் இன்று அனைத்து துறையிலும் கலக்கிக்கொண்டிருப்பதை பற்றி தான் சொல்லப் போகிறேன். ஃபேன், ஏ/சி, சினிமா எனத் தொடங்கி மனிதர்கள் வரை சகலத்திலும் தனது மூக்கை நுழைத்து ஆட்டிப்படைக்கிறது. அட.. அதாங்க.. 'ரேட்டிங்'

     முன்பெல்லாம் ஒரு சினிமா எடுத்தால், ஹிட்டோ ஃப்ளாப்போ போட்ட முதலீட்டை எடுத்துவிடலாம். ஆனால் இப்பொழுது அப்படியல்ல. முதல் காட்சியை திரையிட்டவுடன், வலைத்தளம், யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் என சகலத்திலும் விமர்சிக்கப்படுகிறது. கடைசியில் முக்கியமாக அவர்களது 'ரேட்டிங்'ஐ யும் கொடுத்துவிடுகிறார்கள். அவர்கள் கொடுக்கும் அந்த ஒரு வரியில் படத்தின் எதிர்காலம் (அதாங்க வருமானம்) தெரிந்துவிடும். 

     "அடேங்கப்பா.. ஆனா இந்த 'ரேட்டிங்' மேட்டரு நம்ம வாகனத்துக்கு மட்டும் தாம்பா இல்ல" என்று நினைக்கிறீர்களா? கண்டிப்பா இருக்குங்க.   முக்கியமாக பாதுகாப்பு அம்சங்களை சோதிப்பதற்காக ஐரோப்பிய நாடுகளால் உருவாக்கப்பட்டது தான் 'யூரோ என்காப்' (Euro NCAP), 'க்ளோபல் என்காப்' (Global NCAP). இந்த நிறுவனங்கள் கார்களை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தி, பிறகு அதற்கு ஒரு ரேட்டிங் கொடுப்பார்கள்.



     பெரும்பாலும் கார் தயாரிப்பாளர்கள், நல்ல ரேட்டிங் வந்தால் அதை பெருமையாக பறைசாற்றுவார்கள். இல்லையென்றால் கமுக்கமாக இருந்துவிடுவார்கள்.

     'க்ளோபல் என்காப்' தற்போது இந்தியாவில் விற்பனையாகும் ஒரு காரை சோதனை செய்து தங்கள் முடிவுகளை வழங்கியதில் சர்ச்சைகள் ஆரம்பமாகியிருக்கிறது.

     1986 ல் நிறுத்தப்பட்ட நிறுவனமான 'டட்சன்' பேரைக்கொண்டு பிரபலமான ஜப்பான் நிறுவனமான 'நிஸான்' கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்திய கார், 'டட்சன் கோ'. இதன் ஆரம்ப விலை ரூ.3.70 லட்சம் (ஆன்-ரோட், சென்னை). நீண்ட நாட்களாக மார்கெட்டில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கும் மாருதி ஆல்டோவிற்கு போட்டியாக களம் இறக்கப்பட்டது. 'இந்தியாவில் முதன்முறையாக அறிமுகபடுத்தியாச்சு. இந்தோனேசியா மற்றும் ஆஃப்ரிக்காவில் அறிமுகபடுத்தலாம்' என கனவு கண்டுகொண்டிருந்த நிஸான் இப்பொழுது ஸ்தம்பித்துள்ளது.

     மேட்டருக்கு வருவோம். க்ளோபல் என்காப் நிறுவனம், டட்சன் கோ வை சோதித்துவிட்டு தந்த ரேட்டிங் 0/5. அதாங்க.. முட்டை. அதுமட்டுமல்லாமல் அந்த நிறுவனம் நிஸான் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர். அதன் சாராம்சம் இதுதான். 'இந்தியாவில் உங்களது டட்சன் கோ வின் விற்பனையை உடனே நிறுத்துங்கள்'.

டட்சன் கோ

     இந்த டட்சன் கோ அதன் தாய்நாடான ஜப்பானில் விற்கப்படவில்லை என்பதை குறித்துக்கொள்ளுங்கள். எதெற்கெடுத்தாலும் சீன தயாரிப்பு பொருட்களை கூறுபவர்கள் ஒருமுறை சீனாவிற்கு சென்று பாருங்கள். அங்கே விற்கப்படும் பொருட்களின் தரம் மிகவும் உயர்வாக இருக்கும். அனால் இங்கு மிகவும் சுமாராக இருக்கும். அனைத்து நாடுகளின் குப்பைத்தொட்டியாக மாறிவிட்டது இந்தியா. 

     சரி. இவனுங்கதான் இப்படி. மற்ற கார்கள்?? டாட்டா நானோ, ஹுண்டாய் ஐ10, மாருதி ஸ்விஃப்ட், ஃபோர்டு ஃபிகோ, மாருதி ஆல்டோ 800 என்று அனைத்து கார்களும் எடுத்தது முட்டை தான். இவை அனைத்தும் 60 Kmph வேகத்தில் சோதிக்கபட்டவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்தியாவில் வாகனங்கள் விற்கப்பட கட்டுபாடுகள் மிகவும் தளர்வாக இருக்கிறது என்பதையே இவை சுட்டிக்காட்டுகிறது.

டாட்டா நானோ

ஹுண்டாய் ஐ10

மாருதி ஸ்விஃப்ட் 

ஃபோர்டு ஃபிகோ

மாருதி ஆல்டோ 800


     உலகளவில், இந்தியாவில் சாலை விபத்துக்கள் அதிகமாக நடப்பதற்கு காரணங்கள் 
 1.குப்பையான கார் 
 2.தகுதியில்லாத ஓட்டுநர்கள் 
 3.தரமில்லாத சாலைகள் 
 4.விதிமுறை மீறல்கள் 

     அரசாங்கத்தை குறை சொல்வதற்கு பதில் நாம் செய்யவேண்டியது என்னவென்றால், இவற்றில் மூன்று விஷயங்களை நாமே மாற்றிடலாம். நேர்மையாக ஓட்டுநர் உரிமத்தை வாங்குங்கள். கார் வாங்கவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் விலை, டிசைன் பார்ப்பதற்கு முன்னர் பாதுகாப்பு அம்சங்களான ஏர்பேக், ஏ.பி.ஸ், இ.பி.டி போன்றவை இருக்கிறதா என்று பாருங்கள். (பார்க்க-http://sibhikumar.blogspot.com/2011/02/blog-post_21.html). எக்காரணத்தை கொண்டும் சாலை விதிமுறைகளை மீறாதீர்கள். இவை அனைத்தையும் நாம் மாற்றிக்கொண்டால் 80% விபத்துக்களை தவிர்க்கலாம். 

  'பாத்து சூதானமா நடந்துக்கோங்க சாமீ !!"  

இதற்கு சம்பந்தமாக எனது முந்தைய பதிவுகள்:

//உங்கள் கருத்துக்கள், சந்தேகங்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை பின்னூட்டமாக போடுங்கள். நல்லாயிருந்தா ஒரு ஓட்டு போடுங்கள்//
     

வித்தியாசமாக இருக்கவேண்டுமா?

வாரத்திற்கு ஒரு பதிவு என ஒரு முடிவோடு இறங்கிய நான், தேர்வு குறுக்கே வந்ததால் எழுதுவதை சற்று தள்ளிவைத்திருந்தேன். என்னுடைய கல்லூரியில் ஏதேனுமொரு சங்கத்தில் கண்டிப்பாக இருக்கவேண்டும். அவர்கள் அளித்த நூற்றுக்குமேற்பட்ட சங்கங்களின் பெயர்களில் என்னை மிகவும் கவர்ந்தது Event Managers Club எனப்படும் விழா ஏற்பாட்டாளர்கள் சங்கத்தில் இணைந்தேன். தேர்வு முடிந்த பிறகு எனது கல்லூரியில் நடக்கவிருக்கும் ஒரு பயிற்சி பட்டறையை நடத்தி தருமாறு என்னுடைய பேராசிரியர் கேட்டார். எனவே என்னுடைய நண்பர்கள் மூவருடன் சென்றேன்.

     பொதுவாக பயிற்சி பட்டறை என்றால் மாணவர்களே வருவார்கள். ஆனால் இந்த பட்டறைக்கு பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள்தான் வந்திருந்தனர். முதலில் அவர்களுக்கு பயிற்சியின் அடிப்படைகளை அறிமுகம் செய்துவிட்டு முதன்மை பயிற்சியாளரிடம் மேடையை ஒப்படைத்தோம். பிறகு அவர்களுக்கு டீ, ஸ்நாக்ஸ் மற்றும் மதிய உணவுக்கான ஏற்பாடுகளில் இறங்கினோம். 

     கல்லூரியின் பெரும்பாலான அறைகள் குளிரூட்டப்பட்டிருந்தாலும் அன்று நிறைய பட்டறைகள் நடந்ததால் எங்களுக்கு கிடைத்ததோ சாதாரண அறை. நாங்கள் வெளியே ஏற்பாட்டுகள் அனைத்தையும் முடித்து விட்டு ஆசுவாசமாக உட்கார்ந்திருந்தோம். அறையிலிருந்து வெளியே வந்த ஒரு பெண் பேராசிரியர் (எங்கள் கல்லூரியல்ல) தமது பையனை எங்களிடம் விட்டு சென்றார். உள்ளே காற்றோட்டம் சரியாக இல்லை என்று காரணம் சொல்லி அந்த பையனை பத்திரமாக பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு சென்றார். 

   
வெளியே வந்த பையனின் கைகளில் ஒரு ஆங்கில நாவல். வெளியுலகத்தை ஒரு கணமும் பாராமல் தீவிரமாக படித்துக்கொண்டிருந்தான். நான்காவது படிக்கும் அந்த சிறுவனின் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை கண்டு நான் மிகவும் வியந்தேன். கொஞ்ச நேரம் கழித்து, அவனிடம் பெயரை கேட்டோம். புத்தகத்திலிருந்து கண்களை எடுக்காமல் கூறினான். "ஹர்ஷித்". 

     பிறகு என்னுடைய பேராசிரியர் வந்து எங்களை இன்னொரு அறைக்கு சான்றிதழ்கள் எழுதுவதற்காக அழைத்து சென்றார். நாங்கள் சென்றால் அந்த சிறுவன் தனியாக இருப்பானே என்று அவனையும் அழைத்தார். இப்பொழுது புத்தகத்திலிருந்து கண்களை எடுத்து அவரை பார்த்து, "ஏ.சி இருக்குதா ?" என்று கேட்டான். அவர் சிரித்துக்கொண்டே, "இந்த ரூம்ஸ்ல இன்னும் ஏ.சி வைக்கல.. பட் ஃபேன் இருக்கிறது வா" என்றார். உள்ளே வந்து எங்கள் பேராசிரியரின் பக்கத்தில் உட்கார்ந்தான். பிறகு பேராசிரியரை பார்த்து, "எங்க ஸ்கூல்ல ஃபுல்லா ஏ.சி இருக்கும். பேசாம உங்க காலேஜ மூடியிருங்க" என்றான். 

     நாங்கள் சற்றும் எதிர்ப்பார்க்காத பதில் !! பிறகு எங்கள் பேராசிரியர் மின்சார சேமிப்பு, சிக்கனம் குறித்து ஒரு மினி பாடம் எடுத்தார். பிறகு நடந்தவை உங்கள் பார்வையில்.. 

பேரா: "கிளாஸ் ல என்ன ரேங்க் ?"

ஹர்ஷித்: "நான்தான் ஃபர்ஸ்ட்"

பேரா: "அப்ப நீதான் உங்க கிளாஸ் லீடரா ?"

ஹர்ஷித்: "கிளாஸ் ரெப்ரசண்டேடிவ் !"

பேரா: "சரி.. இப்போ உங்க கிளாஸ்ல பசங்க பேசாம பார்த்துக்க உன்னைய உங்க டீச்சர் சொல்றாங்க. உன் ஃபிரண்ட்ஸ் பேசிட்டே இருக்காங்க. அப்ப நீ என்ன செய்வ ?"

ஹர்ஷித்: "மிஸ் கிட்ட கம்ப்ளைன் பண்ணுவேன்"

பேரா: "அவங்க உன் ஃபிரண்ட்ஸ் தானே"

ஹர்ஷித்: "இஃப் தே டிட் நாட் ஒபே மை வேர்ட்ஸ் தே ஆர் இடியட்ஸ். சோ நோ ப்ராப்ளம்"
(நான் சொல்லவதை கிழ்படிந்து அவர்கள் கேட்கவில்லை என்றால் அவர்கள் முட்டாள்கள். அதனால் சொல்வது தப்பில்லை)

அவர் எதோ ஒரு அவசர பணியாக வெளியே சென்றுவிட்டார். இப்பொழுது எங்கள் முறை. எங்களுக்குள் நடந்த உரையாடலை அப்படியே உங்களுக்கு தருகிறேன்.

சஞ்சய்: "ஏம்ப்பா தம்பி.. தமிழ் புக்ஸ்லாம் படிக்கமாட்டியா ?"

 ஹர்ஷித்: "நோ !"

சுப்பு: "ஏண்டா ?"

ஹர்ஷித்: "பிகாஸ் ஐ டோன்ட் நோ டேமிள் ஸ்க்ரிப்ட். சோ ஐ கான்ட் ரீட் ஆர் ரைட் இன் டேமிள்"
(எனக்கு தமிழ் எழுத்துக்கள் தெரியாது. அதனால் எனக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது)

நான்: "தென் வாட்ஸ் யுவர் மதர் டங் ?"
(அப்படியென்றால் உன்னுடைய தாய்மொழி என்ன ?)

ஹர்ஷித்: "ஆங்... டேமிள்"

கவின்: "நீ எந்த ஸ்டேட் ல இருக்கிற டா ? தமிழ்நாட்டுல தான ?"

ஹர்ஷித்: "இல்ல.. சென்னைல"

சஞ்சய்: "சென்னை மட்டும் என்ன மலேசியாலயா இருக்கு? "

கவின்: "ஏண்டா இந்த ஊர்லே இருந்துக்கிட்டு தமிழ் தெரியாதுனு சொல்றியே"

ஹர்ஷித்: "ஐ ஹேவ் மோர் இனஃப் சப்ஜெக்ட்ஸ் டூ லேர்ன் தேன் டேமிள்"
(எனக்கு தமிழை விட கற்றுக்கொள்வதற்கு நிறைய பாடங்கள் இருக்கிறது)

     இப்போதைய தலைமுறை பிள்ளைகளை பற்றி நிறைய கேள்விப்பட்டிருந்தாலும் நேரில் பார்த்தபோது வியப்பாக இருந்தது. எப்பொழுது ஒருவன் ஒரு மொழியை எழுத, படிக்க, பேச கற்றுக்கொள்கிறானோ அப்பொழுதே அவன் அந்த மொழியை கற்றுகொண்டான் என்று சொல்லமுடியும். கொஞ்சம் கூட தடையில்லாமல் அவன் ஆங்கிலம் பேசியதை பார்த்து அதையாவது ஒழுங்காக எழுதுகிறானா என்று பார்க்க விரும்பினேன். அவன் கையிலிருந்த புத்தகத்தை வாங்கி பார்த்தேன். முதல் பக்கத்தில் அவனுடைய பெயரை தப்பு தப்பாக எழுதியிருந்தான். பிறகு தான் தெரிந்தது அது நியூமராலஜி என்று !!!

     என் பெற்றோர்கள் எனக்கு சொல்லிகொடுத்தது. வாழ்க்கை என்பது 'வாழ்வதற்கு. வாழ்வதற்காக கொஞ்சம் பணம் சம்பாதிக்க வேண்டும்.' இன்றைய பெற்றோர்கள் அதை மாற்றி 'வாழ்க்கை என்பது பணம் சம்பாதிப்பதற்காகவே' என்று சொல்லிக்கொடுக்கிறார்கள். தங்கள் பிள்ளைகள் மற்ற பிள்ளைகளைவிட வித்தியாசமாக இருக்கவேண்டும் என்பதே அவர்களின் ஆசை. தமது பிள்ளைகள் எந்த கஷ்டத்தையும் அனுபவிக்க கூடாது. எந்த தப்பையும் செய்துவிடக் கூடாது.

     அந்த காலத்தைவிட இந்த காலத்தில் பிள்ளைகளுக்கு நிறைய விஷயங்ககளை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கற்றுக்கொடுக்கிறார்கள். ஆனால் அவை அனைத்தையும் எப்படி/எங்கு பயன்படுத்த வேண்டும் என்பதை கற்றுக்கொடுப்பதில்லை. டெல்லி மிருகக்காட்சி சம்பவமே ஒரு சரியான உதாரணம்.

     தங்கள் பிள்ளைகள் சிறுவயதிலே வானத்தில் உயர்ந்து பறக்கவேண்டும் என்று ஆசைப்படும் பெற்றோர்களால் பிள்ளைகள் ஒன்றுமறியாத வயதுகளிலே பறக்க ஆரம்பித்து விடுகிறார்கள். சிலர் வெற்றிகரமாக பறந்தாலும் பலர் பாரம் தாங்காமல் விழுந்துவிடுகிறார்கள் என்பதே நிதர்சனம். இந்த தருணத்தில், என்னுடைய பெற்றோர்கள் எனது சுக துக்கங்ள் அனைத்தையும் நான் சுயமாக கற்றுக்கொள்ள வாய்ப்பளித்தை எண்ணி மிகவும் மகிழ்கிறேன்.

     பட்டறை முடிந்தப்பின் இவை அனைத்தையும் என் நண்பர்களுடன் ஆலோசித்து கொண்டிருந்தேன். ஒருவன் கூறினான், "தமிழ் எதுக்கு டா.. பசங்களுக்கு ஹிந்தி இங்க்லீஷ் தான் கற்றுக்கொடுக்க வேண்டும்". தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அறிஞர் அண்ணா, "நமது கழகத்தை அழிக்க எந்த கட்சியாலும் முடியாது. நாமாக அழித்துக்கொண்டால் தான் உண்டு" என்றாராம். அதைப்போல, தமிழை அழிக்க ஹிந்திகாரனோ தெலுங்கனோ மலையாளியோ தேவையில்லை !!

இந்த பதிவிற்கு சம்பந்தமாக சில படங்கள்...

"எவ்வுளவு இருக்கிறது என்பது முக்கியமல்ல. எப்படி பயன்படுத்துகிறோம் என்பது தான் முக்கியம்"
"வித்தியாசமாக இருக்கிறீர்கள் என்பதற்காக மட்டும் உங்களை பயன்படுத்த முடியாது"



Sunday, October 26
Posted by Sibhi Kumar SenthilKumar

எம்&எம் ஸ்கார்ப்பியோ - ஒரு அலசல்

இந்த வருடத்துடன் ஸ்கார்ப்பியோவின் வயது 12. 1990களில் ரவுடிகள் என்றாலும் அரசியல்வாதிகள் என்றாலும், அவர்களிடம் இருந்தது டாட்டா சுமோக்கள் தான். அதன் பிறகு 1998ல் வந்த டாட்டா சஃபாரி அரசியல்வாதிகள் மற்றும் பெரும் தாதாக்கள் வீட்டில் கம்பீரமாக நின்றது. அதன் பிறகு 2002ல் வந்தது மஹிந்த்ரா ஸ்கார்ப்பியோ.

     ஆரம்பத்தில் ஸ்கார்ப்பியோவின் விற்பனை விகிதம் குறைவாக தான் இருந்தது. உறுதியான கட்டமைப்பு, பிரம்மாண்ட தோற்றம், அதிகமான பவர் என்று அதன் அனைத்து பலங்களும் தெரிந்த பின்னர் 2003 ஆம் ஆண்டு முதல் விற்பனை அதிகமானது. முக்கால்வாசி டாட்டா சஃபாரிகளை அடித்து விரட்டியது. மஹிந்த்ராவின் நிறைவான சர்வீஸ் அனைவரையும் கவர்ந்தது. சரியாக சொல்லவேண்டுமென்றால் மஹிந்த்ரா மீது பெரும் நம்பிக்கையை ஸ்கார்ப்பியோ தான் ஈட்டி தந்தது.

     நாளாக நாளாக ஸ்கார்ப்பியோவிற்கு ரசிகர்கள் அதிகமாகி கொண்டே போனது. காலத்திற்கேற்ப சிறு மாறுதல்கள் தேவைப்பட்டது. ஸ்கார்ப்பியோவின் இரண்டாவது தலைமுறை வந்தது. இந்த முறையும் விற்பனையில் மாறுதல் இல்லை. சக்கைப்போடு போட்டது !!

     கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி, ஸ்கார்ப்பியோவின் மூன்றாவது தலைமுறையை வெளியிட்டது. இந்த புதிய ஸ்கார்ப்பியோவை கொஞ்சம் அலசுவோம்.



     முதலில் நான்கு மீட்டர் நீளம். இந்திய அரசாங்கம், ஒரு வாகனத்தின் நீளம் நான்கு மீட்டர்களுக்குள் இருந்தால் வரிவிலக்கு அளிப்பதாக அறிவித்தது. அதன் பிறகு வந்த கார்களான மாருதி ஸ்விஃப்ட் டிசையர், மாருதி எர்டிகா போன்ற கார்கள் மட்டுமல்லாது டாட்டா ஏஸ்(அதாங்க, 'சின்ன யானை'!!) அனைத்தும் ஹிட்டோ ஹிட்டு. இதுவரை வந்த ஸ்கார்ப்பியோக்கள் நான்கரை மீட்டரில் இருந்தபோது புது ஸ்கார்ப்பியோ நான்கு மீட்டருக்கு வந்திருக்கிறது. இதற்கு பிறகு மஹிந்த்ராவின் அனைத்து கார்களும் நான்கு மீட்டர்களுக்கு மாற்றப்படும் என்று அந்நிறுவனம் சொல்லியிருக்கிறது. இதனால் காரின் விலை பெருமளவில் குறையும்.



     இதுவரை இரண்டு தலைமுறைகளாக வந்த ஸ்கார்ப்பியோக்கள் தோற்றத்தில் பெரியளவில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. எனவே இந்த முறை எம்&எம் நிறுவனம் வெளிப்புறம் மற்றும் உட்புற தோற்றங்களை மாற்றியிருக்கிறது.



     காரின் முன் புறத்தை இதுவரை ஆக்கிரமித்த சாதாரண ஹெட்லைட் ஐ மாற்றி தற்போது எல்.இ.டி ஹெட்லைட் பொருத்தப்பட்டுள்ளது. புதிய க்ரில்லை பார்க்கும்போது டொயோட்டா லான்ட்க்ரூசர் ப்ராடோ ஞாபகத்திற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.



     பின்புறத்தை பெருமளவில் மாற்றினாலும் ரசிகர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளகூடிய வடிவமைப்பு அல்ல. பலருக்கும் பிடிக்காமல் போக வாய்ப்புள்ளது. பின்புற கதவின் கைப்பிடியை மாற்றியுள்ளனர். ஸ்டாப்லைட்டும் எல்.இ.டி யால் செய்யப்பட்டிருக்கிறது.




     என்னை மிகவும் கவர்ந்தது உட்புற மாற்றங்கள்தான். எத்தனை வருடங்கள் கடந்தாலும் உட்புற அலங்காரத்தில் கவனம் செலுத்தாத எம்&எம் நிறுவனம் இப்பொழுது மிகவும் அருமையாக வடிவமைத்திருக்கிறது. எம்&எம் நிறுவனத்தின் கடந்த தயாரிப்பான XUV5OO வின் உட்புற அலங்காரம் போல் தெரிந்தாலும் நன்றாகத்தான் இருக்கிறது. ஸ்டீயரிங் வீல் XUV5OO விலிருந்து அப்படியே எடுத்திருகிறார்கள். 6 இன்ச் டச் ஸ்க்ரீன் மியுசிக் ப்ளேயர் மற்றும் நேவிகேஷன் சிஸ்டமும் அனைவரையும் கண்டிப்பாக கவர்ந்திழுக்கும்.



     காலம்காலமாக மஹிந்த்ரா வண்டிகளில் அனைவரும் குறை சொல்வது 'பாடி ரோல்' தான். வேகமாக செல்லும்போது திரும்பினால் அதன் அதிர்வு உள்ளே உக்கார்ந்திருக்கும் அனைவரும் உணர்வார்கள். இந்த முறை எம்&எம் நிறுவனம் தனது புதிய தொழில்நுட்பத்தால் பாடி ரோல் ஐ மிகவும் குறைத்திருக்கிறது.



     இஞ்சினில் மாற்றம் இல்லாதபோதும் இந்த முறை நன்றாக டியூன் (லிங்குசாமி டியூனிங் அல்ல !!) செய்யபட்டிருக்கிறதால் பெர்ஃபார்மன்ஸ் உயர்ந்திருக்கிறது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது. புதிய கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன் 4X4 வசதியும் ஏபிஸ் ஏர்பேக் வசதியும் ஆப்ஷனளாக தந்துள்ளது.

   
இந்தியாவின் வாகன விற்பனை வரலாற்றின் முதல் முறையாக, புதிய ஸ்கார்ப்பியோவை நீங்கள் Snapdeal.com இல் முன்பதிவு செய்துக்கொள்ளலாம் !! கட்டணம் ரூ.20,000/-  முன்பதிவு செய்ய--> க்ளிக்


     நடிகர்களை போல, அனைத்து வாகனங்களுக்கும் தீவிர ரசிகர்கள் இருப்பது அல்ல. யமஹா RX100, அம்பாசடர், மாருதி 800, புல்லட் என சில வாகனங்களுக்கே அந்த கௌரவம் கிடைக்கும். அந்த வாகனங்களின் தயாரிப்பு நிறுத்தப்பட்டாலும் அவற்றின் பெயர் நிலைத்து நிற்கும். அவற்றில் ஸ்கார்ப்பியோவும் ஒன்று. அம்பாசடர், மாருதி 800 போல் ஸ்கார்ப்பியோவின் தயாரிப்பு நிறுத்தக்கூடாது என்பதே ரசிகர்களின் ஆசை.
Tuesday, September 30
Posted by Sibhi Kumar SenthilKumar

சாலையின் வகைகள்

     நம்மில் பலருக்கு நமது சாலையில் எத்தனை வகைகள் இருக்கிறது என்று தெரிவதில்லை. (நமது நாட்டில் பல இடங்களில் சாலையே இல்லை என்று நீங்கள் சொல்வது எனக்கு கேட்கிறது!!!) ஏன் நமக்கு தெரியவில்லை என்பதற்கு பல காரணங்கள் சொன்னாலும் முக்கியமான காரணமாக நான் கருதுவது வட்டார போக்குவரத்துத் துறையின் மெத்தனம்.

   
வளர்ந்த நாடுகள் என்று சொல்லப்படும் அமெரிக்கா போன்ற நாடுகளில், லைசென்ஸ் எடுக்கவேண்டுமென்றால் சாலை விதிகள் மற்றும் சாலை குறியீடுகளை பற்றி கேட்கப்படும் கேள்விகளுக்கு (எழுத்துப்பூர்வமாக) பதிலளிக்கவேண்டும். நமது நாட்டில் லைசன்ஸ் எப்படி கொடுக்கப்படுகிறது என்று நான் சொல்லத்தேவையில்லை.

     அதனால், இந்த பதிவில் நான் அடிப்படையான சாலை குறியீட்டுகளை உங்களுக்காக பதிவிடுகிறேன்.

1.ஸ்டாப் லைன் (Stop Line):

பொதுவாக இரு வேறு சாலைகளின் இணைப்பிலும் சாலையின் டிராஃபிக் லைட் முன்பாகவும் இருக்கும். இந்த கோட்டிற்கு முன்பாகவே உங்கள் வாகனத்தை நிறுத்தவேண்டும். கோட்டை தாண்டி நிறுத்துவது தண்டனைக்குரிய செயலாகும்.



2.ஜீப்ரா கிராசிங் (Zebra Crossing):

ஒரு பக்கத்திலிருந்து மறுப் பக்கத்திற்கு சாலையில் கடந்து செல்லும் பாதசாரிகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டவை. பாதசாரிகள் இவற்றை தவிர்த்து சாலையின் ஊடே கடந்தால் தண்டனைக்குரிய செயலாகும்.




3.தொடர்ச்சியில்லாத இணைவான கோடு (Parallel Broken Line):

இவற்றை Give way line என்றுக்கூட அழைப்பார்கள். ஒரு சிறிய சாலையிலிருந்து நெடுஞ்சாலையிலோ அல்லது முக்கியமான சாலையிலோ இணையும்போது இவற்றை உபயோகித்திருப்பார்கள். அதாவது உங்கள் முன்னே இருக்கும் சாலையில் செல்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.



4.தடுப்புக் கோடு -இரண்டு வழிச்சாலையில் (Barrier Line):

தொடர்ச்சியான வெள்ளைக் கோடுகளானது. ஓட்டுநர் முன்னிருக்கும் வாகனத்தை முந்துவதற்காக கண்டிப்பாக இந்த கோட்டை தாண்டி செல்லக்கூடாது. எந்த பக்கத்தில் செல்கிறோமோ அதையே கடைப்பிடித்து செல்லவேண்டும்.


5.தடுப்புக் கோடு -நெடுஞ்சாலைகளில் (Barrier Line):

இந்த வகை கோட்டினை நெடுஞ்சாலையில் லேன்களை (Lane) பிரிப்பதற்கு பயன்படுத்தப் படுகிறது. ஓட்டுநர்கள் இவற்றை தாண்டலாம்.





6.தொடர்ச்சியான இணைவான கோடு (Continuous Parallel Line):

இதுவும் ஒரு வகையான தடுப்புக் கோடு தான். இந்த வகையான கோடு இருந்தால் ஓட்டுனர்கள் வாகனங்களை முந்துவதற்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.





7.மஞ்சள் கோடு (Yellow line):

இவ்வகை கோடுகளை பொதுவாக சாலையின் ஓரத்தில் போடுவார்கள். இந்த மஞ்சள் கோடு போடப்பட்டிருக்கும் இடங்களில் கண்டிப்பாக வண்டியை நிறுத்தக்கூடாது.





8.தொடர்ச்சியில்லாத கோடு மற்றும் தடுப்புக் கோடு (Broken Line to Barrier Line):
சில சாலைகளில், தொடர்ச்சியில்லாத கோடு முக்கியமான இடங்களில் (எ.கா. வளைவுகள்) தடுப்புக் கோடுகளாக மாறும். நெடுஞ்சாலையாக இருக்கும்பட்சத்தில் தொடர்ச்சியில்லாத கோடு வரை லேன்களை மாற்றி கொள்ளலாம். ஆனால் தடுப்புக் கோடு வந்த பிறகு லேன் மாறக்கூடாது.

9.சரியான லேனில் செல்லுங்கள்:

மேலுள்ள படத்தில் காட்டி இருப்பதுப்போல நமது நெடுஞ்சாலையின் உட்பகுதியை 'Inner Lane' என்பார்கள். வெளிப்பகுதியை 'Passing Lane' என்பார்கள். பொறுமையாக செல்லும் வாகனங்கள் (கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள்) இடது புறமாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும் வாகனங்கள் வலது புறமாக செல்லவேண்டும். ஆனால் காலம்காலமாக இந்த விதிமுறை மீறப்பட்டு வருகிறது. பெரும்பாலான லாரி ஓட்டுநர்கள் வலது புறமாகவே செல்வார்கள். இது முற்றிலும் தவறு. நெடுஞ்சாலையில் நடக்கும் பெரும்பாலான விபத்துகளுக்கு இதுவே காரணம்.

இந்த பதிவை படிக்கும் அனைவரும், இதற்கு பிறகு விதிமுறைப்படி வாகனத்தை ஓட்டுவோம் என்பதை உறுதியெடுத்துக்கொள்வோம். ஜெய்ஹிந்த் !!
Tuesday, September 23
Posted by Sibhi Kumar SenthilKumar

புதிய பதிவுகள்

Recent Posts Widget

மெக்கானிக்

My photo
Automobiles enthusiast; Video/Photo/Audio editor; blog writer; auto consultant; web UI/UX designer; wrapper designer; personalized products designer at PrintVenue.com & fiverr.com, keyboardist, bathroom singer, optimist and so on. A good learner & listener.

மாஸ் ஆன போஸ்ட்'கள்

ரெகுலர் கஸ்டமர்ஸ்

© Sibhi S Kumar. Powered by Blogger.

- Copyright © வட்டங்களில் சுழலுது வாழ்க்கை -Metrominimalist- Powered by Blogger - Designed by Sibhi Kumar -